Monday, March 24, 2014

குர்பானி கொடுப்பதன் சிறப்பு

வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவருக்கு நபி யவர்களின் எச்சரிக்கை
யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம் என்று நமது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: இப்னுமாஜா 323

குர்பானி கொடுப்பது இப்றாஹீம் (அலை) அவர்களின் வழிமுறை
யாரசூலுல்லா ‘உழ்கிய்யா’ என்றால் என்ன? என்று நபியவர்களிடம் சஹாபாக்கள் கேட்டார்கள். இது உங்களுடைய தந்தை இப்றாஹீம் (அலை) அவர்களின் வழிமுறை என்று சொன்னார்கள். மீண்டும் ஸஹாபாக்கள் யாரசூலுல்லாஹ் இதில் எங்களுக்கு என்ன (நன்மை) இருக்கிறது? என்று கேட்டார்கள். குர்பானி கொடுக்கப்படும் பிராணியின் ஒவ்வொரு முடிக்கும் நன்மை கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜைதுப்னு அர்க்கம் (ரலி) 
நூல்: இப்னுமாஜா 3127

குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறை
எவர் தொழுகைக்கு முன்பு (பிராணியை) அறுத்து விட்டாரோ அவர் தனக்காக வேண்டியே அறுத்துக் கொண்டார் எவர் தொழுகைக்குப் பின்பு அறுத்து விட்டாரோ அவருடைய குர்பானி பரிபூரணம் அடைந்துவிட்டது. மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பெற்றுக்கொண்டு விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்:- அஸ்ரத் அனஸ் (ரலி) 
நூல்:- புகாரி 5546, முஸ்லிம் 5069.

குர்பானியின் இரத்தத்திற்கு அல்லாஹ் இடத்தில் மதிப்பு உண்டு
குர்பானி கொடுக்கும் நாளில் (ஈதுல் அழ்ஹா பெருநாளில்) மனிதர்கள் செய்யக் கூடிய அமல்களில் குர்பானி கொடுப்பதை விட அல்லாஹ்வுக்கு பிரியமான அமல் வேறு எதுவுமில்லை. பலியிடப்பட்ட அந்தப் பிராணி மறுமையில் அதனுடைய கொம்புகளோடும், முடிகளோடும், குளம்புகளோடும் வரும். மேலும் பலியிடப்பட்ட அந்தப் பிராணியின் இரத்தம் பூமியில் விடுவதற்கு முன்பே அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெற்று விடுகின்றது. எனவே சந்தோஷமாகக் கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) 
நூல்: இப்னுமாஜா 3126 திர்மிதி- 1493

பல் முளைத்த ஆட்டை குர்பானி கொடுப்பது
குர்பானிக்காக பல் முளைத்த பிராணியையே அறுங்கள். அது உங்களுக்குக் கிடைக்காவிட்டால் 2 வயதுடைய செம்மறி ஆட்டை அறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) 
நூல்: நஸாயீ 4383, முஸ்லிம் 5082, இப்னு மாஜா 3141

கண், காது சரியாக உள்ள பிராணியை குர்பானி கொடுப்பது அவசியம்
கண்ணிலும், காதிலும் (எதுவிதமான குறையும் இல்லாத) பிராணியை குர்பானி கொடுக்க தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் காதின் முன்பக்கம் கிழிக்கப்பட்டது. காதின் பின் பக்கம் கிழிக்கப்பட்டது. காது பிளக்கப்பட்டது. காதில் துவாரம் இடப்பட்டது ஆகிய பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது என்று என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அலி (ரலி) 
நூல்: நஸயீ 4378

பிராணிகளை சித்திரவதை செய்யாத அளவுக்கு அறுப்பது
அல்லாஹ் ஒவ்வொரு காரியத்திலும் நல்ல வழிமுறையை ஏற்படுத்தி இருக்கிறான். எனவே (சட்டதிட்டத்திற்கு உட்பட்டு) நல்ல முறையில் கொல்லுங்கள். நீங்கள் அறுப்பதாக இருந்தால் நல்ல முறையில் அறுங்கள். (அறுப்பவர்) தன்னுடைய கத்தியை கூர்மையாக ஆக்கிக் கொள்ளட்டும். அறுபட இருக்கும் அந்த பிராணிக்கு நிம்மதி அளிக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஷத்தாதுப்னு அவ்ஸ் (ரலி) 
நூல்: நஸயீ 4417, மிஷ்காத் 357, முஸ்லிம் 5055

பிராணியை அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று சொல்வதும் தம் கையால் அறுப்பதும்
பெருமானார் (ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு, வெள்ளை செம்மறியாட்டு கடாக்களை குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறி தக்பீர் சொல்லி தன்னுடைய கையால் அறுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஹஸ்ரத் அனஸ் (ரலி) 
நூல்: திர்மிதி 1494

கொம்பு உடைந்து போன பிராணியை குர்பானி கொடுக்கக் கூடாது
கொம்பு உடைந்து போன பிராணியையும், காது அறுந்து போன பிராணியையும் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அலி (ரலி) 
நூல்: இப்னு மாஜா 3545

குர்பானி கொடுக்கக் கூடாத பிராணிகள்
நான்கு பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
1. குருட்டுத் தன்மை தெளிவாகத் தெரியும் குருட்டு பிராணி
2. தெளிவாகத் தெரியும் வியாதியுள்ள பிராணி
3. ஊனம் வெளிப்படையாகத் தெரியும் நொண்டி பிராணி
4. வயது முதிர்ந்த எழும்பு மச்சை பலவீனம் அடைந்த பிராணி.
அறிவிப்பவர்: பர்ரா இப்னு ஆஜிப் (ரலி) 
நூல்: இப்னு மாஜா 3144

ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு கொடுப்பது
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்பானி கொடுப்பது எப்படி இருந்தது, என்று அபூ ஐயூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருவர் தமக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் ஓர் குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.
அறிவிப்பவர்: அதா உப்னு யஷார் (ரலி) 
நூல்: திர்மிதி 1505

பெருமானாரின் வழிமுறையைப் பின்பற்றி இரண்டு ஆடு கொடுத்த ஸஹாபியர்கள்
நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆடு கொடுத்தார்கள். நானும் இரண்டு ஆடு கொடுத்து வருகிறேன்.
அறிலிப்பவர்: ஹஸ்ரத் அனஸ் (ரலி) 
நூல்: 5553

கூட்டுக் குர்பானி
நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஒரு ஒட்டகத்தையும் ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் நபி (ஸல்) அவர்களோடு குர்பானி கொடுத்தோம்.
அறிவிப்பவர்:  ஜாபிர் (ரலி) 
நூல்: திர்மிதி 1502, அபூதாவுது 2809

குர்பானி பிராணியின் உறுப்புக்களை கூலியாகக் கொடுக்கக் கூடாது
(குர்பானி பிராணியின்) ஒட்டகத்தைச் சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அதை அறுத்ததற்கு கூலியாக அதிலிருந்து எதையும் கூலியாகக் கொடுக்கக் கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அலி (ரலி) 
நூல்: புகாரி 1716

குர்பானியில் விசேடமானது
குர்பானி கொடுப்பதில் செம்மறியாட்டில் 2 வருடம் பூர்தியான (கொழுப்புள்ள) குட்டி மிகவும் (விசேசமானது) நல்லது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) 
நூல்:- மிஷ்காத்.

குர்பானி இறைச்சியை சேமிக்கலாம்
உங்களில் குர்பானி கொடுப்பவர் 3 நாளைக்குப் பிறகு குர்பானி இறைச்சி வீட்டில் இருக்கும் நிலையில் காலை பொழுதை அடைய வேண்டாம் என்று நபியவர்கள் சொன்னார்கள். அடுத்தாண்டு வந்த பொழுது ஸஹாப்பாக்கள் யாரசூலுல்லாஹ் சென்ற ஆண்டு செய்வதைப் போல இந்த ஆண்டும் செய்யட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) நீங்கள் குர்பானி இறைச்சியை சாப்பிடுங்கள் மற்றவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள். சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டு மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு இருந்தது. அந்த சிரமத்தைப் போக்க நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சல்மா இப்னு அக்வாஉ (ரலி) 
நூல்: புகாரி 5569

குர்பானி கொடுப்பவர் 10 நாளைக்கு கடைப்பிடிக்க வேண்டிய காரியம்
குர்பானி கொடுப்பவர்கள் துல்ஹஜ் உடைய 10 நாளைக்கு தன்னுடைய நகங்களை வெட்ட வேண்டாம் என்றும் தன்னுடைய (உடம்பிலுள்ள) முடிகள் எதையும் சிதைக்க வேண்டாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அன்னை உம்மு சல்மா (ரலி) 
நூல்: நஸயீ 4367

No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...